உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 330 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 January 2026

உளுந்தூர்பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 330 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.


உளுந்தூர்பேட்டை, ஜன.08:


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு கல்வி ஆண்டில் பயிற்சி முடித்த மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.


இவ்விழாவிற்கு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஸ்ரீனிவாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கி, பயிற்சி நிறைவு செய்த 330 மாணவ–மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.


விழாவில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், தொழில்நுட்ப கல்வி பெற்ற மாணவர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், அரசு வழங்கும் மடிக்கணினிகள் மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்றும் தெரிவித்தார். மாணவர்கள் இந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அவர் வாழ்த்தினார்.


இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய குழு தலைவர் ராஜவேல், துணைத் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் டேனியல் ராஜ் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்கள், அலுவலர்கள், மாணவ–மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


விழா முடிவில், மடிக்கணினி பெற்ற மாணவ–மாணவிகள் தமிழக அரசு மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad