கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள தனியார் மதுபான கடை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்த மதுபான கடை அமைந்துள்ள பகுதியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) செயல்பட்டு வருவதுடன், ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இதனால் மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் அன்றாடம் அந்த வழியாகச் சென்று வர வேண்டிய சூழல் நிலவுகிறது.
மதுபான கடை செயல்படத் தொடங்கியுள்ளதால், அப்பகுதியில் சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும், மதுபானம் அருந்துவோர் நடமாட்டம் காரணமாக மாணவர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளுக்கு இடையூறுகள் ஏற்படக்கூடும் என்றும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
கல்வி நிலையம் மற்றும் குடியிருப்புகள் அருகே மதுபான கடை செயல்படுவது சமூக நலனுக்கும், மாணவர்களின் கல்விச் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கோ அல்லது அகற்றுவதற்கோ மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே நிலவி வருகிறது. கல்வி நிறுவனம் மற்றும் குடியிருப்பு பகுதியை ஒட்டி செயல்பட்டு வரும் இந்த மதுபான கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment