கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், ஸ்ரீ சாரதா ஆசிரமம் சார்பில் ஐந்து இடங்களில் நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
நகரின் முக்கிய பகுதிகளான மணிக்கூண்டு திடல் அருகில், அரசு மருத்துவமனை அருகில், கிராம நிர்வாக அலுவலகம் அருகில், நாராயணன் தியேட்டர் அருகில், விருத்தாசலம் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் உள்ளிட்ட 5 இடங்களில் இந்த நீர் மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மக்கள் நலத் திட்டத்தை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மற்றும் மோர் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோடை காலத்தில் இத்தகைய சமூகப்பணிகள் மிக அவசியம் என்றும், பொதுமக்களின் நலனை முன்னிட்டு தன்னார்வ அமைப்புகள் முன்வருவது பாராட்டத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், ஸ்ரீ சாரதா ஆசிரமத்தின் நிர்வாகி யத்திஸ்வரி ஆத்ம விகாசப்ரியா அம்பா, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் ஆசிரம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோடை வெயிலின் உச்சத்தில் பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் இந்த நீர் மோர் பந்தல் ஏற்பாடு, உளுந்தூர்பேட்டை பகுதியில் சமூக அக்கறையுடன் செய்யப்பட்ட சிறப்பான மக்கள் சேவையாக பாராட்டப்படுகிறது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment