கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த வெள்ளையூர் கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கட்சி கொடியேற்றும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும், மேற்கு மண்டல நடவடிக்கை குழு உறுப்பினருமான விஜய் ஆர். பரணி பாலாஜி கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சியை கண்டு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நாள்தோறும் விலகி நமது இயக்கத்தில் இணைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் வரவேற்பது நமது பண்பாடு. ஆனால் மாற்றுக் கட்சியிலிருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் வந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்கள் இணைந்தாலும், தளபதி விஜய்க்காக ஆரம்ப காலத்திலேயே போஸ்டர் ஒட்டி, நோட்டீஸ் விநியோகித்து, கட்சிக்காக களத்தில் உழைத்த தொண்டர்களுக்கே உள்ளாட்சித் தேர்தலில் முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழக வெற்றி கழகத்தில் உள்ள அடிப்படை தொண்டர்களின் இடத்தை யாராலும் பறிக்க முடியாது. கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் தொண்டர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் நிச்சயம் வழங்கப்படும். நமது தலைவர் நினைக்கும் மக்கள் நலத் திட்டங்களை கிராமம் தோறும் கொண்டு சேர்க்க வேண்டுமென்றால், உள்ளாட்சி அமைப்புகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பொறுப்பேற்க வேண்டும்.
தூய்மையான மற்றும் நேர்மையான நிர்வாகம் அமைய வேண்டுமெனில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தையும் அதன் தோழமை கட்சிகளையும் மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். ஒரு ரூபாய் கூட ஊழல் செய்யாத, மக்களுக்காக பணியாற்றக்கூடிய நேர்மையான வேட்பாளர்களை ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பொறுப்புகளுக்கு நிறுத்துவோம்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு அன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக இணை செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான கு. மோகன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளான ராஜலட்சுமி, மணிகண்டன், அன்பரசு, சரத்குமார், சுவிதா, வேலுமணி, பாரத், விஜய் செல்வா, சக்திவேல், சுபாஷ், கண்ணன், செந்தில் முருகன், வேணுகோபால், சிவகுமார், கார்த்திக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வெள்ளையூர் கிளை நிர்வாகிகளான ஆசிப் அலி மற்றும் சாகுல் அமிது ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment