உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக நடிகை கௌதமி தீவிர பிரச்சாரம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 15 April 2026

உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக நடிகை கௌதமி தீவிர பிரச்சாரம்.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவுக்கு ஆதரவாக, அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் நடிகையுமான கௌதமி திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.


திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள கெடிலம், பரிக்கல், மடப்பட்டு, தேவயானந்தல், கிழக்கு மருதூர், சேர்ந்தநாடு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தின் போது, பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


கெடிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், பிரச்சார வாகனத்தில் இருந்து பேசிய கௌதமி, “தற்போதைய அரசின் காரணமாக விலைவாசி உயர்வு, வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு சுமைகள் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளன. நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களை கொண்டு வந்து மக்களுக்கு சுமையற்ற ஆட்சியை வழங்குவோம் என கூறுபவர் எடப்பாடி கே பழனிசாமி. எனவே வரும் 23ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தமிழகத்தை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்தார்.


பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் ஆர்வமுடன் கௌதமியை வரவேற்று கைகொட்டி உற்சாகம் வெளிப்படுத்தினர். சிலர் “எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே” என கோஷமிட்டனர்.


தொடர்ந்து, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சார வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாகச் சென்று, பொதுமக்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார்.


D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad