உளுந்தூர்பேட்டை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு அலுவலக பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளதால், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உளுந்தூர்பேட்டை நகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் மழைநீர் தேங்கிய பகுதிகள் மற்றும் அலுவலக வளாகங்களில் புகை மருந்து அடிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம், சார்பு பதிவாளர் அலுவலகம், வட்டல் வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் முக்கிய அரசு அலுவலக பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொதுமக்கள் தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரத்தை பேணுவதன் மூலம் தொற்றுநோய்களைத் தவிர்க்க நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:
Post a Comment